புதுச்சேரி: சூதாட்ட கிளப், லாட்டரிக்கு அனுமதியளிப்பது சிலரின் சுயநலத்துக்கு மட்டுமே பயனளிக்கும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியிருந்தார். ஆவேசமடைந்த கவர்னர் சூதாட்ட கிளப்புகள் திறப்பது, லாட்டரி விற்பனைக்கு ஒத்துக்கொள்வது ஆகியவைதான் மக்கள் நலனா? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அமைச்சரவைக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சூதாட்டத்தை கொண்டு வருவதை மக்கள் விரும்பவில்லை. இதன் மூலம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மக்கள் இழந்துவிடுவார்கள். தங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அனைத்து பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் தரத்தை கூட பாதிக்கும். சூதாட்ட கிளப்புகளுக்கு அனுமதியளித்த சில ஆண்டுகளில் புதுச்சேரியின் சமூக, ஆன்மிக, எண்ணங்கள் அனைத்தும் மாறிப்போய்விடும். சில பேரின் சுய நலனுக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியது. மதுபான கூடங்களை திறந்து விடுவது என்ற அமைச்சரவையின் உடன்படிக்கைகள் எப்படி? என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மாணவர்கள், கணவன்மார்கள், பிள்ளைகள் சூதாட்டம் ஆடியும், பீர் குடித்தும் கெட்டுப் போய்விடுவார்கள். இது ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கக் கூடியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.